×

எச்.ராஜா பிரசார பட்டுவாடாவில் மோதல் அதிமுக நிர்வாகிக்கு கத்திகுத்து

ஆலங்குடி: ஆலங்குடி அருகே எச்.ராஜா பிரசாரம் செய்துவிட்டு சென்றதற்கு பின் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள மாஞ்சான்விடுதியில் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை வருவதாக அதிமுகவினர் தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கூடினர். ஆனால், நீண்ட நேரத்திற்கு பிறகு இரவு 9.30 மணிக்கு எச்.ராஜா அப்பகுதிக்கு வந்து வாக்கு சேகரித்துவிட்டு சென்றார்.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த  ரவி (35) (அதிமுக கிளை செயலாளர்) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்குமிடையே வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருவரும் கட்டிப்பிடித்து சண்டையிட்டு உருண்டுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த  பொற்பனையான்(40), முருகேசன் (38), ரெங்கசாமி (50) ஆகியோர் சேர்ந்து கொண்டு ரவியை தாக்கியுள்ளனர். மேலும், சின்னத்துரைதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை குத்தினார். இதனால், ரவி வலிதாங்க முடியாமல் அலறினார். இதனைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ரவியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரவி ஆலங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : clash ,H. Raja Prasada Patduvat ,administrator ,AIADMK , H. Raja, AIADMK
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயகுமாரின்...